இதுவரை நாம் பயின்றது நின்று முன் குனியும் ஆசனங்கள். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் முன் குனிந்து பழக வேண்டிய நான்கு ஆசனங்கள் வரிசையாக முன் குனிபவையாக முதலில் பயின்றோம். ஒவ்வொரு ஆசனமும் அதன் எதிர் ஆசனத்தால்தான் முழுமையடைகிறது எனலாம். முன் குனிந்து ஒரு நிலையை செய்த பின், பின் வளைந்து ஒரு ஆசனத்தை செய்யும்போதுதான் இடுப்புப்பகுதி முழுமைக்கும் சக்தி கிடைக்கும். ஆக, நாம் பயின்ற இந்த அய்ந்து ஆசனங்களுக்கும் மாற்று ஆசனத்தை இன்று பார்க்கப் போகிறோம்.
முதலில் நாம் பார்க்க இருக்கும் ஆசனம் தாடாசனம். இது பத்மாசனத்திற்கு (Lotus Pose) மாற்று ஆசனமாகும். பத்மாசனத்தில் இரண்டு கால்களை இடுப்புக்கு கீழ் பூட்டி விடுவதால் இரத்தம் மேல் நோக்கி தலை வரை பாய்ச்சப்படுகிறது என்று பார்த்தோம் அல்லவா? பத்மாசனம் முடிந்த பின் இந்த தாடாசனத்தை செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் மீண்டும் கால் வரை சீராக பாயத் தொடங்குகிறது.
தாடாசனம் என்ற வடமொழி சொல்லுக்கு மலை நிலை என்று பொருள். “தாடா” என்றால் “மலை” ஆகும். மலையிலிருந்து நீர் கீழ்நோக்கித்தான் வரும் அல்லவா? அது போல, இந்த ஆசனத்தை செய்யும்போது பத்மாசனத்தில் மேல் ஏறிய இரத்த ஓட்டம் தாடாசனத்தில் மலையிலிருந்து நீர் வழிந்தோடுவது போல் தலையிலிருந்து கால் நோக்கி இரத்தம் பாய்ந்து ஓட்டத்தை சீர் செய்து விடுகிறது. அதாவது, தலை முதல் கால் வரை இரத்தத்தால் சுத்தப்படுத்தியாகி விட்டது. சரி, இதன் மிகுதிப் பலன்களையும் செய்முறை விளக்கத்தையும் பார்ப்போம்.
பதுமாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
தாடாசனத்தின் பலன்கள்
- உடலின் சமநிலையை (balance) பராமரிக்கிறது.
- சரியான விதத்தில் நிற்பதையும், நடப்பதையும், அமருவதையும் (posture) உறுதி செய்கிறது.
- சையாடிக் வலியை போக்க உதவுகிறது
- தொடை தொடங்கி பாதம் வரை கால்களை பலப்படுத்துகிறது
- மூட்டழற்சியின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது
- மனதை ஒருமுகப்படுத்துகிறது.
- மன அமைதியை கொடுக்கிறது.
செய்முறை
தாடாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
- இரண்டு பாதங்களையும் அருகருகே வைத்து நேராக நிற்கவும்.
- கைகள் உடலிலிருந்து சற்று விலகி பக்கவாட்டில் இருக்க வேண்டும். கை விரல்கள் நீட்டியவாறு இருக்க வேண்டும். மாறாக, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லும் பாணியில் ஒன்றாக வைக்கலாம்.
- உங்கள் இரண்டு பாதங்களின் நான்கு புறமும் எடை சமமாக பகிரப்படுவதை உறுதி செய்யவும்.
- உங்கள் உடல் மற்றும் முகம் முழுவதும் இறுக்கங்கள் அற்று இருக்க வேண்டும். நாக்கை தளர்வாக வைக்கவும்.
- கண்களை தளர்வாக (relaxed) வைத்து நேராக பார்க்கவும்.
- உங்கள் உடம்பு முழுமையிலும் சக்தி பரவுவதாக கற்பனை செய்யவும். அதை மனம் ஒன்றி உணரவும்.
- துவக்கத்தில் 20 வினாடிகள் வரை செய்யலாம். சிறிது சிறிதாக ஒரு நிமிடம் வரை தாடாசனத்தில் நிற்கலாம்.
- மூச்சு சீராக இருக்க வேண்டும்.
- மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு
தலைவலி, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் தூக்கம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் தாடாசனம் செய்வதை தவிர்க்கவும்.