உடல் மன ஆரோக்கியம்

சாமை உப்புமா

“உப்புமாவின் சுவையே அலாதி” என்றால் இந்தப் பக்கத்தை விட்டு வெளியேறக் கூடியவரா நீங்கள்? அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான சிற்றுண்டி வகைகளைப் போல் அல்லாமல் உப்புமா வகைகளுக்குத் தீவிர ஆதரவாளர்களும் உண்டு, தீவிர எதிர்ப்பாளர்களும் உண்டு. மிகச் சுலபமாகச் சில நிமிடங்களில் செய்யக் கூடிய சிற்றுண்டி என்பதால் பெரும்பாலும் சமைப்பவர்களின் அபிமான உணவு இது. உப்புமா சுவையை விரும்பாதவர்களாக இருந்தாலும் சாமையின் நன்மைகள் கிடைக்க, சாமை உப்புமா பக்கம் கவனத்தைத் திருப்பவும். ஏனென்றால், இன்று நாம் சாமை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். 

சிறுதானியங்களின் நன்மைகள் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

இன்று அமேசானில் சாமை வாங்குவதற்காகப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது இந்த offer. சாமை உட்பட அய்ந்து சிறுதானியங்களுக்குமாகச் சேர்த்து இது நிச்சயம் வாங்கக் கூடிய ஒன்றுதான்.  நீங்களும் வாங்க விரும்பினால் இந்த விளம்பரத்தில் click செய்யலாம். நான் affiliate program-ல் இருந்தாலும் என்னுடைய பரிந்துரைகள் பாரபட்சமற்றவையாகவே இருக்கும்.

சாமை உப்புமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
  • சாமை – 1 ஆழாக்கு
  • வெங்காயம் – 2, நடுத்தர அளவு
  • தக்காளி – 2, நடுத்தர அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 2
  • கொத்துமல்லி – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – சிறிதளவு (தேவையெனில்) 
  • தண்ணீர் – 2 ஆழாக்கு. (கீழுள்ள குறிப்பைப் பார்க்கவும்)

தாளிக்க:

  • நெய் அல்லது நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

  • சாமையைத் தண்ணீரில் நன்றாக அலசவும்.
  • வெறும் வாணலியில் சுத்தம் செய்த சாமையை வாசனை வரும் வரை வறுக்கவும். 
  • வறுத்த சாமையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். 
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். 
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் வறுத்து ஊற வைத்த சாமையை தண்ணீரில்லாமல் எடுத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கிளறவும். 
  • அனைத்துப் பொருட்களும் நன்றாகக் கலக்கும் வகையில் கிளறி விட்டு, ஒரு தட்டுப் போட்டு சிறிது நேரத்துக்கு மூடி விடவும். 
  • அவ்வப்போது திறந்து அடிபிடிக்காமல் கிளறி விடவும். 
  • தண்ணீர் வற்றியதும் தணலைக் குறைத்து மேலும் சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும். காந்தல் ருசி பிடித்தவர்கள் சிறிது காந்த விடலாம்.
  • நன்றாக வெந்து விட்டதை உறுதி செய்து கொண்டு, சிறிது கொத்துமல்லி தழையைத் தூவி அடுப்பிலிருந்து  இறக்கி வைக்கவும்.
  • தேவையெனில் சிறிது ஆறிய பின் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்கலாம். 

குறிப்பு

சாமையை வெந்நீரில் ஊற வைப்பதாக இருந்தால் வாணலியில் ஊற்றும் தண்ணீரின் அளவைப் பாதியாகக் குறைத்துப் பின் தேவைப்பட்டால் சிறிது சிறிதாகச் சேர்க்கவும்.

உப்புமா உதிரி உதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் தண்ணீரின் அளவை மேலும் குறைக்கலாம். 

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்