பெயரிலேயே புரிந்திருக்கும், இது வீரம் பெறக் கூடிய ஆசனம். பயத்திற்கு எதிர்ப்பதம் வீரம். பொதுவாக பயம் அதிகமானால் கை, கால்கள் நடுங்கும். பதட்டமும் கூடவே தொற்றிக் கொள்ளும். அதன் எதிர்விளைவாக கோபமும் வரும். தொடர்ந்து பல பிரச்சினைகளை கொண்டு வரும். நாம் பலமானவர்களாக இல்லாதிருப்பதாக எண்ணிக் கொள்வதாலேயே இவையெல்லாம் வருகிறது. அந்த பயத்தைப் போக்கி பலமானவர்களாக நம்மை உணர வைப்பது இந்த வீராசனம்.

எப்படி? இந்த நிலையை தொடர்ந்து செய்யும் போது கணுக்கால்கள், மூட்டுகள், இடுப்பு, கழுத்து பகுதி, தோள்கள், முதுகுத்தண்டு ஆகியவை இரத்த ஓட்டத்தையும் பலத்தையும் பெறுகிறது. முக்கியமாக, நரம்பு மண்டலத்தையும் தசை இயக்கத்தையும் ஒருங்கிணைக்கிறது. இயல்பாகவே தசைகளும், நரம்புகளும் பலம் பெறும்போது பலவீனமான தசைகள் நரம்புகளுக்குள் ஒளிந்திருக்கும் பயம் தங்க இடமில்லாது போய் விடுகிறது. உடலை பலப்படுத்த கூடியது, வீரம் இயல்பாகவே வந்து விடும் என்பதாலேயே வீராசனம் என்று பெயர் பெற்றுள்ளது.

Hero Pose

வீராசனத்தின் மேலும் சில பலன்கள்
  • இடுப்பு தொடங்கி கால் விரல்கள் வரை நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது.
  • கால்களின் சோர்வை போக்குகிறது.
  • மூச்சுக் கோளாறுகளை போக்க உதவுகிறது.
  • சீரணத்தை மேம்படுத்துகிறது.
  • மாதவிடாய் கால வலிகளை போக்குகிறது.
  • அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது.
  • பாதத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.
செய்முறை
  • தரையில் முட்டி போட்டு வஜ்ராசனத்தில் அமரவும்.
  • முன்னால் குனிந்து கால்களை விலக்கி வைத்து இரண்டு கால்களுக்கும் இடையில் இருக்கும் இடத்தில் அமரவும்.
  • கைகளை தொடையின் மேல் வைக்கவும். உள்ளங்கைகள் கீழ் நோக்கி இருக்க வேண்டும். மாறாக, இரண்டு கை விரல்களையும் கோர்த்து தலைக்கு மேல் உயர்த்தி உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்குமாறும் வைக்கலாம்.
  • 20 நொடிகள் இந்த நிலையில் அம்ர்ந்த பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். தொடர்ந்து பயிற்சி செய்யும் போது இந்த நிலையில் ஒரு நிமிடம் வரை இருக்கலாம்.
குறிப்பு

தரையில் அமர முடியாதவர்கள், ஒரு தலையணை அல்லது yoga block ஒன்றை வைத்து அதில் அமர்ந்து பயிற்சி செய்யவும்.

தீவிர மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்