ஒரு குழந்தை கால்களை மடக்கிய நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையே பாலாசனம். பாலா என்றால் குழந்தை ஆகும்.

ஏன் குழந்தை குப்புறப்படுக்கிறது? ஆறு அல்லது ஏழாம் மாதத்தில் குழந்தை குப்புற கவிழ்கிறது. அதன் பின் அப்படியே வலம் வரத் துவங்கும். தன் மார்பினாலும் மேற்கையினாலும் உந்தித் தள்ளி வலம் வரும். குழந்தையின் இந்த இயக்கத்தினால்தான் அதன் முதுகு, கழுத்து, தோள்பட்டைகள், கைகள் என உடலின் மேல்பகுதி பலமடைந்து, உட்காருதல், தவழுதல், முட்டிப் போடுதல் என அடுத்த நிலைக்கு குழந்தை போகிறது. இந்த நிலைக்குச் செல்வதற்கு முன் படுத்தே தவழுவதால் மார்பு, கை, தோள் என அதன் உடலின் மேல் பகுதி அழுந்தி வலி எடுக்கும். குழந்தை குப்புறப் படுக்கும்போது, மார்பு, தோள், பின் பகுதிகளில் தவழ்வதால் ஏற்படும் இறுக்கம் தளர்கிறது. குழந்தையின் மன அழுத்தம், பதட்டம் குறைகிறது.

இரத்த ஓட்டம் உடல் முழுதும் சீராகிறது. உடல், மனதை அமைதிப்படுத்துகிறது. இவ்வளவும் நடப்பதால்தான் குழந்தை தவழ்ந்து, நடக்கும் நிலைக்குச் செல்கிறது.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், இந்த ஆசனத்தை ஏன் செய்ய வேண்டும் என்று. குழந்தை அனுபவிக்கும் அத்தனை நன்மைகளும் இவ்வாசனத்தினால் நமக்கும் கிடைக்கிறது.  குழந்தைகளுக்கு இந்த பலன்கள் கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் தொடர்ந்து குப்புறப்படுப்பதை அனுமதிக்காதீர்கள்.

தொடர்ந்து ஆசனங்கள் செய்யும் போது தோள் வலி, கை வலி ஏதேனும் ஏற்பட்டால் இந்த நிலையில் இருப்பது அவற்றைப் போக்கி விடும். மனம் அமைதியாகி, மந்தத்தன்மை விலகி, உடல், மனம் இரண்டும் ஒரு குழந்தையின் துள்ளல் நிலைக்கு வந்து விடும்.

Child Pose

yoga gear
பாலாசனத்தின் மேலும் சில நன்மைகள்
  • முதுகுத்தண்டின் இறுக்கத்தைப் போக்க உதவுகிறது.
  • சீரணத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைப் போக்குகிறது.
  • தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • சோர்வை போக்கி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
  • கால் முட்டியின் தசைநார்களைப் பலப்படுத்துகிறது.
  • தூக்கமின்மையைப் போக்குகிறது.
  • மனதை அமைதிப்படுத்துகிறது.
செய்முறை

பாலாசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • வஜ்ஜிராசனத்தில் அமரவும்.
  • மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கைகளை பக்கவாட்டில் உயர்த்தித் தலைக்கு மேல் உயர்த்தவும்.
  • மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்னால் குனிந்து உங்கள் நெற்றியை கால் முட்டிகளுக்கு முன்னால் தரையில் வைக்கவும். உங்கள் பிட்டத்தை உயர்த்தக் கூடாது. கைகளைத் தரையில் நீட்டியவாறு வைக்கவும்.
  • சீரான மூச்சில் 20 முதல் 30 வினாடிகள் வரை இந்த நிலையில் இருந்த பின் பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு

முட்டி மற்றும் கணுக்காலில் தீவிர வலி உள்ளவர்கள் பாலாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

நெற்றியைத் தரையில் வைக்க முடியாதவர்கள், முன்னால் ஒரு தலையணை அல்லது அது போன்ற எதாவது ஒரு உயரமான பொருளை வைத்து அதன் மேல் நெற்றியை வைக்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்