இதுவரை பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உள்ளிட்ட சில கோணாசன வகை ஆசனங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த கோணாசனம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது. இவ்வாசனத்தை ஹலாசனம் செய்த பின் பழகலாம்.

சுப்த கோணாசனம் பயில்வதால் விசுத்தி சக்கரம் தூண்டப்படுகிறது. தொடர்பாடல் திறன், எண்ணங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவை விசுத்தி சக்கரத்தின் சீரான இயக்கத்தால் மேம்படுகிறது.

சுப்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் பலப்படுத்தவும் செய்கிறது
  • முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
  • இளமையான தோற்றத்தைத் தருகிறது
  • உடலுக்கு ஆற்றலைத் தருகிறது
  • வயிற்று உள்ளுறுப்புகளைப் பலப்படுத்துகிறது
  • சீரண மண்டல செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
  • தொப்பையைக் கரைக்கிறது
  • இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
  • இடுப்பு மற்றும் தொடையில் உள்ள அதிக சதையைக் கரைக்கிறது
  • குழந்தையின்மை குறைப்பாட்டை நீக்குகிறது
  • கால்களை பலப்படுத்துகிறது
  • மாதவிடாய் காலத்து வலிகளைப் போக்க உதவுகிறது
  • கவனத்தைக் கூர்மையாக்குகிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
செய்முறை
  • விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகள் உடலின் பக்கவாட்டில் இருக்க வேண்டும்.
  • மூச்சை வெளியேற்றியவாறு ஹலாசன நிலைக்கு வரவும்.
  • தலைக்குப் பின்னால் கைகளைக் கொண்டு சென்று பாதங்களைப் பிடிக்கவும். மாறாக, கால் பெருவிரலையும் பிடிக்கலாம்.
  • கால்களைப் பக்கவாட்டில் கொண்டு செல்லவும்.
  • 20 முதல் 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும்.
  • ஆசன நிலையிலிருந்து வெளியில் வர, கால்களை விடுவித்து, ஹலாசன நிலைக்கு வரவும். பின் கால்களை உயர்த்தி முன்னால் கொண்டு வந்து தரையில் நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.
குறிப்பு

கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் சுப்த கோணாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

கால்களைத் தலைக்குப் பின்னால் தரையில் வைக்க முடியவில்லையென்றால், தலைக்குப் பின் காலுக்கு ஒன்றாக இரண்டு yoga block-களை வைத்து அவற்றின் மீது கால்களை வைக்கவும்.

கால்களைப் பின்னால் வைக்கும்போது கழுத்துப் பகுதியில் வலி அல்லது அசவுகரியம் ஏற்பட்டால், கழுத்து மற்றும் தோள்களுக்கு அடியில் மடித்த கம்பளத்தை வைத்துப் பழகவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழ்