‘பர்வதம்’ என்றால் ‘மலை’. இந்த ஆசனத்தில் உடல் மலை போன்ற அமைப்பில் உள்ளதால் இது பர்வதாசனம் என்று பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனம் என்கிற ஆசனமும் பர்வதாசனம் என்று அழைக்கப்படுவதுண்டு. அமர்ந்த நிலை பர்வதாசனத்தில் முதுகுத்தண்டு வலுப்பெறுவதோடு, ஸ்திரத்தன்மையும் தேக உறுதியும் ஏற்படுகிறது.
அமர்ந்த நிலை பர்வதாசனத்தின் மேலும் சில பலன்கள்
- நுரையீரலை பலப்படுத்துகிறது.
- சீரண மண்டலத்தின் இயக்கத்தை செம்மையாக்குகிறது.
- இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
- முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
- இடுப்புப் பகுதியை உறுதியாக்குகிறது.
- கால்களை பலப்படுத்துகிறது.
- மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.
- மன அமைதியை உருவாக்குகிறது.
செய்முறை
- பத்மாசனத்தில் அமரவும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளை பக்கவாட்டில் உயர்த்தவும்.
- மெதுவாக மூச்சை வெளியேற்றியபடி கைகளை தலைக்கு மேல் உயரத் தூக்கவும்.
- கை முட்டியை வளைக்காமல் இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லுவது போல் ஒன்றாக வைக்கவும். உங்கள் மேல் கைகள் காதுகளை ஒட்டியபடி இருக்க வேண்டும்.
- நேராக பார்க்கவும்.
- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் கைகளை கீழே இறக்கவும்.
குறிப்பு
பத்மாசனத்தில் அமர முடியாதவர்கள் அர்த்த பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இந்த ஆசனத்தை பயிலலாம். கைகளை நன்றாகத் தூக்க முடியாவிட்டால் முடிந்த வரை தூக்கிப் பழகவும். தீவிர முதுகுத்தண்டு கோளாறு, அதிக தோள் வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயில்வதை தவிர்க்கவும்.