உடல் மன ஆரோக்கியம்

சஹஸ்ரார சக்கரத்தின் பலன்கள்

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் எட்டாவதாக உள்ளது சஹஸ்ரார சக்கரம் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). வடமொழியில் ‘சஹஸ்ரார’ என்றால் ‘ஆயிரம் இதழ்கள்’ என்று பொருள். சஹஸ்ரார சக்கரம் ஆங்கிலத்தில் Crown Chakra என்று அழைக்கப்படுகிறது. சஹஸ்ரார சக்கரம் உச்சந்தலையில் இருக்கிறது. இதனுடன் தொடர்புடைய ஒலியாகக் கூறப்படுவது ‘ஓம்’ ஆகும்.

Table of Contents

மூலாதார சக்கரத்தில் துவங்கும் குண்டலினி சக்தி சஹஸ்ரார சக்கரத்தில் முடிகிறது. (மூலாதார சக்கரத்தின் தன்மைகள், பலன்கள் மற்றும் மூலாதாரத்தைத் தூண்டும் வழிமுறைகள் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்)  ‘தான்’ என்ற அகந்தை மறைந்து எல்லையில்லா பிரபஞ்ச ஆற்றலோடு மனம் அய்க்கியப்படுவது இச்சக்கரத்தின் சீரான செயல்பாட்டால்தான். சஹஸ்ரார சக்கரம் சீராகச் செயல்படும் போது நம்மைப் பற்றியும்,  நம் வாழ்க்கை மற்றும் நம் சிந்தனைகளைப் பற்றியும் ஆழ்ந்த பரிமாணம் கொண்ட புரிதல் பிறக்கிறது. பற்றுகளைக் கடந்த மிக உயர்ந்த மனநிலை கைகூடுகிறது.

சஹஸ்ரார சக்கரத்தின் தன்மைகள் மற்றும் சஹஸ்ரார சக்கரத்தோடு தொடர்புடைய உறுப்புகள்

பீனியல் சுரப்பி என்று அழைக்கப்படும் சஹஸ்ரார சக்கரம் அறிவின் பிறப்பிடமாகும். இது ஆழ்மனதோடு தொடர்புடையது.

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் 

எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்                                                

மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்                                             

அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

 – திருமந்திரம் பாடல் 12

திருமூலரின் திருமந்திரத்தின் 12-வது பாடலில் பீனியல் சுரப்பியாகிய சஹஸ்ரார சக்கரத்தைத்தான் நெற்றிக் கண் என்று குறிப்பிடுகிறார். மேலும், பீனியல் சுரப்பியாகிய சஹஸ்ரார சக்கரமே ஆழ்மனதின் நுழைவாயில் என்று கூறுகிறார்.

கடந்துநின் றான்கம லம்மல ராதி                                                                 

கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன்                                                      

கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்                                 

கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

 – திருமந்திரம் பாடல் 14

மேற்கூறப்பட்டுள்ள திருமூலரின் திருமந்திரத்தின் 14-வது பாடலில் உடலிலுள்ள சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமஸ் ஆகிய குரு சக்கரத்தைக் கட்டுப்படுத்துவது பீனியல் சுரப்பி ஆகிய சஹஸ்ரார சக்கரம் என்று திருமூலர் கூறுகிறார்.

அப்பனை நந்தியை ஆரா அமுதினை                         

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை                       

எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்                          

அப்பரி சீசன் அருள்பெற லாமே.

 – திருமந்திரம் பாடல் 36

திருமூலர், திருமந்திரத்தின் 36-வது பாடலில் பீனியல் சுரப்பியான சஹஸ்ரார சக்கரம் உயிர் தரும் அமிழ்தை சுரப்பதாகக் கூறியிருக்கிறார். அவர் உயிர் தரும் அமிழ்து என்று குறிப்பிட்டிருப்பதைத்தான் நவீன மருத்துவம் melatonin என்று அழைக்கிறது. மேலும் இந்த உயிர் தரும் அமிழ்தானது இதயத்தைப் பாதுகாக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

(மரு. ச. இரா. தமிழரசுவின் திருமூலர் திருமந்திரம் – தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து’ என்கிற புத்தகத்திலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட பாடல்களின் விளக்கங்களின் ஒரு பகுதி இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.)

சஹஸ்ரார சக்கரம் சீராகச் செயல்படும்போது நம் மனதில் அமைதியும் நம்பிக்கையும் நிறைகின்றன. அறிவும் தெளிவும்   பிறக்கின்றன. முழுமையான உடல் மற்றும் மன நலத்திற்கு சஹஸ்ரார சக்கரம் சீராக இயங்க வேண்டியது மிக அவசியமாகும்.

மூளை, தலை, கண்கள் மற்றும் காதுகள் சஹஸ்ரார சக்கரமாகிய பீனியல் சுரப்பியால் நிர்வகிக்கப்படுகிறது. எலும்பு, தசை மற்றும் சருமத்தையும் சஹஸ்ரார சக்கரம் நிர்வகிக்கிறது.

சஹஸ்ரார சக்கரம் சீராக இயங்குவதால் ஏற்படும் நன்மைகள்

சஹஸ்ரார சக்கரம் சீராக இயங்குவதால் ஏற்படும் நன்மைகள்:

  • மனம் ‘தான்’ என்ற சிந்தனைப் போக்கிலிருந்து விடுபடுகிறது.
  • பிறரிடம் பரிவு காட்டும் பண்பும் நன்றி உணர்வும் வளர்கின்றன.
  • நிலவும் சூழல்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வளர்கிறது.
  • மனதில் அமைதி நிறைகிறது.
  • உயர்ந்த சிந்தனைகள் பிறக்கின்றன; மனம் விசாலமடைகிறது

சஹஸ்ரார சக்கரம் சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் சஹஸ்ரார சக்கரத்தின் இயக்கம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உடல் அறிகுறிகள்
  • நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகள்
  • தலைவலி
  • தூக்கமின்மை
  • மறதி சார்ந்த நோய்கள்
  • தைராய்டு கோளாறுகள்
  • அட்ரீனல் கோளாறுகள்
  • அசதி
மன அறிகுறிகள்
  • தெளிவற்ற சிந்தனைப் போக்கு
  • எதிலும் தீர்க்கமான முடிவு எடுக்க இயலாமை
  • பிறர் மீது அவநம்பிக்கை / எதிர்மறை எண்ணங்கள்
  • ஊக்கமின்மை
  • எதிலும் ஆர்வமில்லாத நிலை
  • அதீத பயம்
  • தனிமை உணர்வு
  • மன அழுத்தம்

சஹஸ்ரார சக்கரத்தைச் சீராக இயங்க வைப்பது எப்படி?

  • சஹஸ்ரார சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்
  • எசன்சியல் எண்ணெய்
  • சுய ஊக்கம்
  • உணவு
  • பொது விதிகள்

சஹஸ்ரார சக்கரத்தைத் தூண்டும் யோகாசனங்கள்

சஹஸ்ரார சக்கரத்தின் இயக்கத்தைச் சீராக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வரவும்:

1) உபவிஸ்த கோணாசனம்

2) இராஜ புஜங்காசனம்

3) விபரீதகரணி

4) சர்வாங்காசனம்

5) பத்ம ஹலாசனம்

6) மத்ஸ்யாசனம்

7) அர்த்த சிரசாசனம்

8) சிரசாசனம்

9) ஓய்வாசனம்

சஹஸ்ரார சக்கரத்தைச் சீராக இயங்க வைக்கும் எசன்சியல் எண்ணெய்கள்

சஹஸ்ரார சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்த பின்வரும் எசன்சியல் எண்ணெய்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

  • Benzoin essential oil
  • Cedarwood essential oil
  • Elemi essential oil
  • Frankincense essential oil
  • Gurjum essential oil
  • Helichrysum essential oil 
  • Jasmine essential oil
  • Lotus essential oil
  • Myrrh essential oil
  • Palo Santo essential oil
  • Rose essential oil
  • Sandalwood essential oil
  • Spikenard essential oil
  • Vetiver essential oil

எசன்சியல் எண்ணெயை carrier எண்ணெயோடு கலந்து diffuser-ல் ஊற்றி அதன் வாசனையை நீங்கள் இருக்கும் அறையில் பரவச் செய்யவும்.

சுய ஊக்கம்

சுய ஊக்கம் உங்கள் உடல், மன ஆற்றலை மேம்படுத்தக் கூடிய அற்புத ஆற்றல் கொண்டது. சஹஸ்ரார சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்களை ஒவ்வொரு நாளும் பல முறை சொல்வதன் மூலம் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

சஹஸ்ரார  சக்கரத்திற்கான சுய ஊக்க வாக்கியங்கள்

  • பிரபஞ்சப் பேராற்றல் என்னுள் நிறைந்திருக்கிறது.
  • என் மனம் பற்றுகளைக் கடந்து நிற்கிறது.
  • ‘நான்’ என்ற சிந்தனை நிலையிலிருந்து என் மனம் விடுபட்டிருக்கிறது.
  • சுற்றியுள்ளவர்களிடம் நான் பரிவோடும் அன்போடும் நடக்கிறேன்.
  • நிலவும் சூழல்களை ஏற்கும் பக்குவத்தோடு இருக்கிறேன்.
  • என் மனதில் அமைதி நிறைந்திருக்கிறது.
  • நான் தெளிவான சிந்தனையும் விசாலமான மனதையும் கொண்டிருக்கிறேன்.
  • நான் தீர்க்கமாக சிந்தித்து முடிவுகளை எடுக்கிறேன்.
  • எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கிறேன்.

சஹஸ்ரார சக்கரத்திற்கான உணவு

பொதுவாக சஹஸ்ரார சக்கரத்திற்கென்று குறிப்பான உணவு வகைகள் என்று எதுவும் கூறப்படுவதில்லை. உண்ணா நோன்பு இருத்தலும், அதிகமாக பழரசங்கள் மற்றும் தண்ணீர் பருகுதலும் சஹஸ்ரார சக்கரத்தினைத் தூண்டக் கூடியவையாகக் கருதப்படுகின்றன.

சஹஸ்ரார சக்கரத்தின் சீரான இயக்கத்திற்கான பொது விதிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொது விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சஹஸ்ரார சக்கரத்தின் இயக்கத்தை மேம்படுத்தலாம்:

  • சூரிய ஒளியில் தினமும் சிறிது நேரத்தைச் செலவிடவும்.
  • இயற்கையான சூழலில் தினசரி நடைபயிலவும்.
  • ஆசனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரவும்.
  • உங்களின் உச்சந்தலை வழியாக பிரபஞ்ச ஆற்றல் உங்கள் உடல் முழுவதும் பரவும் காட்சியை மனக்கண்ணால் காணும் பயிற்சியைத் தினசரி செய்யவும்.
  • சஹஸ்ரார சக்கர தியானம் செய்யவும்.
  • ரெய்கி போன்ற பயிற்சிகளைப் பழகவும்.
இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo-Che1211 என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

சக்கரங்கள் ஏழு அல்ல, எட்டு – தமிழரின் மருத்துவத் தொன்மை

பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.

Read More »

ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்களுக்கான பலன்களும் அவற்றை இயங்க வைக்கும் முறைகளும்

இதுவரை, முதலாம் சக்கரம் தொடங்கி அய்ந்தாம் சக்கரம் வரை ஒவ்வொரு சக்கரமாக பார்த்து வந்தோம். இன்று நாம் ஆறாவது மற்றும் ஏழாவது சக்கரங்களை சேர்த்துப் பார்க்கப் போகிறோம். ஏனெனில், இக்காலத்தில் ஆறாவது சக்கரமான ஆக்ஞா

Read More »

விசுத்தி சக்கரத்தின் பலன்களும் விசுத்தி சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் அய்ந்தாவதாக உள்ளது விசுத்தி சக்கரம் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). இது வடமொழியில் ‘விசுத்த’ என்றும் ‘விசுத்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘விசுத்த’

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்